புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கதிராநல்லூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதை அகற்ற நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டார். மேலும் ஏரியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி புதிதாக மரங்களை நட தமிழ்நாடு டெவலப்மெண்ட் பெடரேஷன் என்ற தனியார் அமைப்பு முன் வந்தது.
இந்த நிலையில் கருவேல மரங்களை அகற்றி, மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி நடந்தது. பணியை ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்ததோடு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கவுதம், புவியியலாளர் தங்கராசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராசன், கஜேந்திரன், பூங்கொடி வரதராஜன், சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர் தரணி பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.