தமிழக செய்திகள்

‘பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது’ - வானதி சீனிவாசன்

காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மாணவர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின்போது நகைச்சுவை நடிகர் புல்கிட் மணி என்பவர், ராகுல் காந்தியிடம் பிரதமர் மோடி பேசுவதுபோல் கிண்டலாக பேசினார்.

குறிப்பாக, பிரதமர் மோடி, வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது போன்றும், அடிக்கடி 'மை ஃபிரண்ட்' என்ற வார்த்தையை கூறியும் புல்கிட் மணி நடித்துக் காட்டினார். தொடர்ந்து, ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று புல்கிட் மணி கேட்டதற்கு, "நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள், மோடி ஜி?" என்று ராகுல் காந்தி பதிலளித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடந்து கொண்டதாக பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான கருத்துகளையோ அல்லது அர்த்தமுள்ள மாற்றுத் திட்டங்களையோ முன்வைப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து தனிப்பட்ட தாக்குதல்களிலும், மக்களை பிளவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் கண்ணியம் மற்றும் பொறுப்புணர்வில் இருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளது என்பதையே இத்தகைய செயல்பாடு வெளிப்படுத்துகிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT