தமிழக செய்திகள்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர் வீடுகளில் சோதனை

கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இன்று (சனிக்கிழமை) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

19 இடங்களில் சோதனை

சென்னையில் மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், அபிராமபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்து தற்போது தில்லை நகர் வீட்டிற்கு கே.என். நேரு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட தி.மு.க.-வினர், கே.என். நேருவின் இல்லம் முன்பு குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாகச் சோதனை நடத்தியிருந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என். நேரு வீடுகளில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT