கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பயணங்களின்போது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் - ரெயில்வே நடவடிக்கை

சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செல்போனில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே எச்சரித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரெயில்களை பயன்படுத்துகின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில், குடும்பமாக, நண்பர்களாக, தனிநபராக என பலரும் தங்களுக்கு ஏற்றவாறு பயணம் செய்து வருகின்றனர். ரெயில் பயணத்தின்போது கூச்சலிடுவது, அதீத சத்தமாக பேசுவது, செல்போனில் சத்தமாக பாடல்களை கேட்பது உள்ளிட்டவைகள் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதனால் மற்ற பயணிகள் முகம் சுழிக்கும் சம்பவங்களும், பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரெயில்வே சார்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல்கள் நேரடியாகவோ, இணையதளம் வாயிலாகவோ வழங்கப்பட்டு வருகிறது. அதில், ரெயில்களில் பாடல்கள் கேட்கும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அதிக சத்தமாக பாடல்கள் கேட்க கூடாது. 'ஹெட்செட்' மூலம் கேட்க வேண்டும். செல்போனில் பேசும்போது மெதுவாக பேச வேண்டும். செல்போனில் அழைப்பு வருவதற்கான சத்தத்தை குறைந்த அளவில் வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, இதில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய ரெயில்வே சட்டம் 145 என்ற பிரிவின் கீழ் ரெயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் சென்னை சென்டிரலுக்கு உட்பட்ட பகுதிகளில் 115 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது, நடைபெறும் இந்த சம்பவத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் தற்போது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்புப் படையினர் கூறும்போது, "ரெயில்களில் பயணம் மேற்கொள்ளும்போது, பயணிகள் மூலம் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில், ரெயில்வே பணியாளர்களிடம் அல்லது ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் நேரடியாகவோ அல்லது 'ரெயில் மதத்' செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகாரின்பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையை அவர்கள் கோர்ட்டில் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, பயணிகள் ஒருவர், மற்றொருவருக்கு இடையூறு ஏற்படாத வகையில் தங்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT