ஓசூர்:
ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் நேற்று மதியம் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. ஓசூர் பஸ் நிலையத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது.
இதேபோல், ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 2-வது சிப்காட் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே உள்ள மேம்பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழை நீரில் தத்தளித்தவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர். கனமழையின்போது ஓசூர் ஜி.ஆர்.டி. சர்க்கிள் அருகே வந்த ஒரு முதியவர், தடுமாறியவாறு அந்த பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் முதியவரை கால்வாயில் இருந்து மீட்டனர்.
ஓசூர் அருகே கொலதாசபுரம் கிராமத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். ஓசூரில் கனமழையை தொடர்ந்து பரவலாகவும், விட்டு, விட்டும் இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் அருகே மிடுதே பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டனர். மேலும் வகுப்பறைக்குள் புகுந்த நீரை மாணவ, மாணவிகளே வெளியேற்றி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டது.