திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளம் மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, பாம்பாறு, தேனாறு உள்ளிட்ட பிரதான ஆறுகள் மற்றும் சிற்றோடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக் கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 28-ந் தேதி அணையின் நீர் பிடிப்பு பகுதியான கேரள வனப்பகுதியில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 29-ந் தேதி முதல் தூவானம் அருவி வழியாக, அணைக்கு நீர்வரத்து ஏற்பட தொடங்கியது. இதனால் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அதன்படி, கடந்த 29-ந் தேதி முதல் நேற்று வரை 19 நாட்களில் அணையின் நீர்மட்டம் 26.97 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு தினமும் 600 கன அடிக்கும் மேலாக தொடர்ந்து நீர்வரத்து வருகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் அணை யில் 88 அடிக்கு தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீர் மட்டம் 55.51 அடியாக உள்ளது. வினாடிக்கு 651 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இதனால் அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்திற்கு தகுந்தவாறு நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இருக்கின்ற தண்ணீரை வைத்து நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியை தொடங்கினால் பருவமழை தீவிரமடையும் போது தண்ணீர் வீணாகாமல் வயல்வெளிகளை வந்தடையும். அப்போது, மகசூல் முழுமையாக கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.