தமிழக செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: ஒரே நாளில் 6 அடி உயர்ந்த சேர்வலாறு அணை

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்தது.

தொடர் மழை

தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய போதிலும், இடையே அடியோடு நின்று விட்டது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், அணைகளின் நீர்மட்டம் குறைந்தது. குற்றாலம் உள்ளிட்ட அருவிகளுக்கான நீர்வரத்தும் குறைந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக நெல்லை, தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதிகளில் பரவ லாக தொடர் மழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று 2 ஆயிரத்து 58 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.

ஒரே நாளில் 6 அடி உயர்ந்த சேர்வலாறு

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 81½ அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்தால் நேற்று ஒரே நாளில் மேலும் 6 அடி உயர்ந்து 87½ அடியாக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் மணிமுத்தாறு, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பாபநாசம் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தென்காசி அணைகள்

தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணை நீர் மட்டம் நேற்று 2½ அடி உயர்ந்து 63 அடியை எட்டியது. 84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 62 அடியாகவும், அடவிநயினார் அணை 2 அடி உயர்ந்து 85 அடியாகவும் உயர்ந்துள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அணைகளில் நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் நெல் சாகுபடி பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.