சேலம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. தற்போது இருவரும் தனித்தனியே செயல்பட்டு வருகின்றார்கள். இருவரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் என சொல்லி வருகின்றனர். ஆனால் உண்மையான பாமக நாங்கள் தான் என கூறி வந்த அன்புமணி ராமதாஸ் வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கிறார். அவருக்கே மாம்பழம் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்சி மற்றும் சின்னத்தை மீட்க போராடிய ராமதாஸின் முயற்சி பலன் அளிக்கவில்லை. பின்னர் சின்னத்தை முடக்கும் முயற்சியும் ராமதாசுக்கு தோல்வியில் முடிந்தது. இதனால் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்தார். வேட்பாளர்களையும் ராமதாஸ் அணி அறிவித்து இருக்கிறது. மற்ற கட்சிகள் எல்லாம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில் சசிகலாவும் அனல் பறக்க பிரசாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல் ராமதாசும் பிரசாரத்தை தொடங்கினார்.
அதன்படி, சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் நேற்று பிரசாரத்தை முடித்து விட்டு இறங்கிய போது மயக்கமடைந்து கீழே சரிந்து விழுந்த ராமதாஸை அவரது கட்சி தொண்டர்கள் தாங்கி பிடித்தனர். உடனடியாக சேலம், குரங்குச்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராமதாஸுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு சீலநாயக்கன்பட்டியில் உள்ள மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சேலம் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். சென்னையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.