கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழகத்தின் நலன் கருதி திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் - ராமதாஸ்

தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்; தாமதப்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள் கிடைக்காததால் தமிழக கவர்னர், விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள பல கட்சிகளிடம் ஆதரவு நல்கியதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் அவர்களது ஆதரவு கடிதங்களை கொடுத்துள்ளது. இந்த ஆதரவுகளை கொடுத்தும் தமிழக கவர்னர் 118 உறுப்பினர்களுக்கான ஆதரவு கடிதங்களை கொடுத்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று திரும்பத் திரும்ப திருப்பி அனுப்புவது கவர்னர் ஏதோ ஒரு உள்நோக்கத்தில் இருப்பது தெரிகிறது. கவர்னரை வைத்து பின்புலத்தில் இருந்து கொண்டு பாஜக இயக்குவதாக பெரும்பான்மையான மக்களால் பேசப்பட்டு வருகிறது.

மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும். அந்த கடமையை மதித்து தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை மனதில் கொண்டு தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்க வேண்டும். இதை தாமதப்படுத்தக் கூடாது. உடனே அழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தமிழக நலன் கருதி ஆதரவளித்துள்ள நிலையில், தமிழகத்தின் நலன் கருதி தமிழக மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் அரசியல் செய்து வருகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை அளிக்க வேண்டும்.

அவரது ஆதரவை அளிக்கும் பட்சத்தில் தமிழக கவர்னர் விஜய்யை அழைத்து தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். இப்போது உள்ள சூழ்நிலையை மனதில் கொண்டு தம்பி திருமாவளவன் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழகத்தில் ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தி, ஒரு மாற்றத்தை தமிழக மக்கள் இடத்தில் கொண்டு வந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு அவர் அளிக்கின்ற ஆதரவைக் கொண்டு அமைய உள்ள தமிழக அரசை சிறப்பாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கிட வேண்டும் என்பதை வேண்டுகோளாக வைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.