திருப்பூர்,
ஆடை உற்பத்திக்கு மூலப்பொருளான பருத்தி விளைச்சலை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஆனாலும், ஆண்டுக்கு ஆண்டு பருத்தி மகசூல் குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளைவிட நடப்பு பருத்தி ஆண்டில் (2025 அக்டோபர் முதல் 2026 செப்டம்பர் வரை) மகசூல் குறையும் என்று தெரிகிறது.
அதாவது, 290 லட்சம் பேல்களாக (ஒரு பேல் 170 கிலோ) குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளில் இருந்து பருத்தி பஞ்சு இறக்குமதி செய்யப்படுகிறது. ஈரான் - இஸ்ரேல் இடையே நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம் இறக்குமதிக்கு கொடுக்கப்பட்ட ஆர்டரே இன்னும் வந்துசேரவில்லை. ஏற்கனவே, உள்நாட்டு சந்தையில் பருத்தி பஞ்சு வரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது இறக்குமதியும் சரிந்துள்ளதால், விலையும் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரே வாரத்தில் ஒரு கேண்டி பஞ்சு (356 கிலோ) ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விலை அதிகரித்துள்ளது. நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களை நிதி நெருக்கடியில் தள்ளியுள்ளது. பருத்தி பஞ்சு விலை உயர்ந்துள்ளதால், நூல் விலையும் உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.