தமிழக செய்திகள்

சென்னையில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தோறும் வினியோகம்.. வெளியான அறிவிப்பு

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தோறும் வினியோகம் செய்யப்பட உள்ளதாக கூடுதல் பதிவாளர் அறிவித்துள்ளார்.

சென்னை,

கூட்டுறவு சங்கங்களின் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது வினியோகத்திட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, மார்ச் மாதத்திற்கு 2 மற்றும் 3-ந் தேதிகளில் சென்னையிலுள்ள அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையார், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொது மக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.