தமிழக செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் ரேஷன் பொருட்கள்: இன்றும், நாளையும் வினியோகம்

990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கு சென்று பொது வினியோகத்திட்ட பொருள்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

990 ரேஷன் கடைகள்

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் தாம்பரம் ஆகிய 18 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 990 ரேஷன் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தாயுமானவர் திட்டம்

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மண்டலத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.