புதுடெல்லி,
மாணவர்களின் போராட்டம் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் அமித்ஷாவின் பதிலை அமைதியாக கேட்க வேண்டும் எனவும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மழைக்காலக் கூட்டத்தொடர் நிறைவடைய இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையால் பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் தொடர்பான முக்கிய மசோதாக்களின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் 16-வது நாளான இன்று காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டங்களால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின.
அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், டெல்லியில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நடவடிக்கை குறித்து உள்துறை மந்திரி அறிக்கை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். நாடாளுமன்ற வளாகத்திற்கு அமித்ஷா வருகை தந்தாலும், அவைக்குள் அவர் காணப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசுகையில், மாணவர் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கை குறித்து மக்களவையில் விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அதற்கு பதிலளிப்பார் என்றும் தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து வெளியேறாமல் அமைதியாக கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மாணவர் போராட்டங்கள் குறித்த விவாதத்திற்கும் அரசு தயாராக இருப்பதால், அவையில் நடைபெறும் விவாதத்தின்போதும் அதற்குப் பதிலளிக்கும்போதும் எதிர்க்கட்சிகள் எந்தவிதமான அமளியிலோ அல்லது முழக்கமிடும் செயலிலோ ஈடுபடக்கூடாது என்றும் கிரண் ரிஜிஜு கூறினார்.