சென்னை,
காவிரி விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கி.வீரமணி, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ஜவாஹிருல்லா, காதர் மொகிதீன், திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. காவிரி மீட்பு பயணத்தை டெல்டா பகுதியில் எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், இரண்டு குழுக்களாக பிரிந்து பயணத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாளை திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து ஒரு குழுவும், 9 ம் தேதி அரியலூரில் இருந்து மற்றொரு குழுவும் பயணம் துவக்குகின்றன.
எஸ்சி எஸ்டி பிரச்னை தொடர்பாக சென்னையில் 16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் போராட்டம் நடத்துகிறோம். மத்திய மாநில அரசுகள் இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி பிரச்னைக்காக எத்தகைய வழக்கையும் சந்திப்பேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.