தமிழக செய்திகள்

‘டாஸ்மாக்’ மது விற்பனைக்கு ரசீது கட்டாயம் கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க நடவடிக்கை

‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

டாஸ்மாக் கடைகளில் ஒரு குவாட்டர் பாட்டிலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை காட்டிலும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக மதுபிரியர்கள் மனவேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே மதுகடைகள் முன்பு விலைபட்டியல் வைக்கப்பட வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதனை பொருட்படுத்துவது இல்லை என்பது மதுபிரியர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

விலைப்பட்டியல்- ரசீது

இந்தநிலையில் கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில், ஏற்கனவே அறிவுறுத்தியபடி டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும். மது விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறைரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மொத்தமாக விற்க கூடாது

மேலும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் வெளியிட்ட மற்றொரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட மேலாளர்கள் டாஸ்மாக் ஊழியர்களிடம் விளக்கமாக தெரிவித்து அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.

மொத்தமாக மதுவகைகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு