தமிழக செய்திகள்

காஞ்சீபுரத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் நிலம் மீட்பு

காஞ்சீபுரத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீன மடத்துக்கு சொந்தமான ரூ.48 லட்சம் மதிப்பிலான நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

நிலம் ஆக்கிரமிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்திற்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் செங்கல்வராயன் ஒத்தவாடை தெரு பகுதியில் இருந்தது. 1218 சதுர அடி அளவுள்ள ரூ.48 லட்சம் மதிப்புள்ள இந்த நிலத்துக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கொடுக்காமல் ஹரிதாஸ் என்பவர் ஆக்கிரமித்து இருந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக விழுப்புரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் சொத்தை மீட்குமாறு கோவில் நிர்வாகங்கள் பிரிவு தனி தாசில்தார் ராஜனுக்கு உத்தரவிட்டார்.

கட்டிடம் இடித்து அகற்றம்

இதனையடுத்து அறநிலையத்துறை காஞ்சீபுரம் சரக உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன் தலைமையில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், அமுதா, பூவழகி, ஆய்வாளர் பிரித்திகா, கோவில் மேலாளர்கள் சுரேஷ், மணிகண்டன் மற்றும் போலீசார் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் இருந்த கட்டிடம் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது மயிலம் பொம்மபுரம் ஆதீனத்தின் அதிகாரம் பெற்ற அலுவலர் ராஜீவ்குமார் ராஜேந்திரன், மேலாளர் சந்தானம், காஞ்சீபுரம் தாசில்தார் புவனேசுவரன், துணை தாசில்தார் ஹரி உள்பட பலரும் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT