சென்னை,
தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-மிகவும் திறமையான தொழில்முறை சார்ந்த மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு செயல்முறையை உறுதி செய்வதற்காக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியானவர்களை நியமிப்பதற்கான ஆள்சேர்ப்பு முறையை சீராக அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் மாநிலத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள இளைஞர்களும் இதுபோன்ற பணியிடங்களில் வேலைவாய்ப்பை பெற வாய்ப்பு ஏற்படும். எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (கூடுதல் செயல்பணிகள்) சட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தும் வகையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (டி.என்.பி.எஸ்.சி.) கூடுதல் பணியாக ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்த சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.