சென்னை,
சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக தென்மாவட்டங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு, 70 கி.மீ. தூரத்திற்கு ரூ.1,400 கோடி செலவில் புதிய ரெயில் பாதை அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரெயில்வே துறை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோதும், நிலம் கையகப்படுத்தி வழங்குவதில் மாநில அரசு மெத்தனம் காட்டியதால், சுமார் 229 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படாமல் இருந்தது. இப்படி, பணியில் தொய்வு ஏற்பட்டதால், ரெயில்வே துறையும் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது, சாலை மார்க்கமாக இந்த வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், சரக்கு போக்குவரத்தும் உயர்ந்துள்ளதை தொடர்ந்து, திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய ரெயில் வழித்தடத்தில், பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சரக்கு ரெயில்களையும் இயக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், தமிழக அரசும் தேவையான நிலத்தை கையகப்படுத்தி வழங்க முன்வந்துள்ளது.
இதனால், 18 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த திண்டிவனம் - திருவண்ணாமலை ரெயில் பாதை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்தப் பணிகள் 2028-ம் ஆண்டு முடிவடையும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.