தமிழக செய்திகள்

புரசைவாக்கத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி - அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

புரசைவாக்கத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் உயிர் இழந்த 26 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று கடந்த 5-ந் தேதி தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, சென்னை புரசைவாக்கத்தில் மழையால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் மரணம் அடைந்த சென்னை பெரும்பாக்கம் வெங்கடேசன் என்பவரின் மனைவி சந்தியாவுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

இதே போன்று, புரசைவாக்கத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் மரணம் அடைந்த சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கன்குதேவி என்பவரின் கணவர் யுவராஜியிடமும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்தஜோதி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT