சென்னை,
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற பேரவைப் பொதுத் தேர்தலில் மக்கள் தீர்ப்பும் அளித்துவிட்டனர். இதில் தமிழக வெற்றிக் கழகம் அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தபோதும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்து இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த சூழ்நிலையில் “அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்” என்கிற பழமொழிக்கேற்ப அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போவதாக வரும் செய்திகள் மிகவும் வேதனை அளிக்கிறது. இது வாக்களித்த மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகமாகும். மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள்? உங்களை போன்ற சந்தர்ப்பவாதிகளுக்கா வாக்களித்தனர். இல்லையே? பின்னர் எவ்வாறு மக்களின் தீர்ப்பை மாற்ற நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நீங்களெல்லாம் திராவிட கட்சிகள் என்று சொல்லி ஏன் திராவிடத்தை கொச்சைப்படுத்துகிறீர்கள். மக்களின் உணர்வுகளுக்கு தயவு செய்து மதிப்பளியுங்கள்.
புரட்சித்தலைவரால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மாவால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தீயசக்தி திமுக, புரட்சித்தலைவரையே தூக்கி எறிந்த கட்சி. புரட்சித்தலைவி அம்மாவை சட்டமன்றத்திலேயே அவமானப்படுத்திய ஒரு கட்சி. புரட்சித்தலைவி அம்மா மீதும், என் மீதும் தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு, எங்களை சிறையில் அடைத்த கட்சி, கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை கசக்கி பிழிந்த ஒரு மக்கள் விரோத கட்சி. இப்படிப்பட்ட ஒரு கட்சியோடு கூட்டு சேர உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை. நீங்களெல்லாம் அதிமுகவினர் என்று சொல்லிக்கொள்ள என்ன உரிமை இருக்கிறது. அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சூழ்நிலையில்,கழகத்தொண்டர்கள் ஏற்கனவே சொல்லொணா துயரத்தில் வயிறெரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களை மேலும் இழிவுப் படுத்தும் செயலாகத்தான் பார்க்கமுடிகிறது. கழக தொண்டர்களின் நலனைப் புறம்தள்ளிவிட்டு, தன்னலத்தை மட்டும் பெரிதாக நினைக்கும் சுயநலவாதிகள் எப்படி ஒரு தலைவராக தன்னை சொல்லிக்கொள்ள முடியும். இது போன்ற சுயநலப்பேர்வழிகளிடமிருந்து கழகத்தை காப்பாற்றத்தான் நான் தொடர்ந்து போராடி கொண்டு இருக்கிறேன்.
அதிமுக இன்றைக்கு சுயநலவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது. தீயசக்தி திமுகவினரோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்ட காரணத்தினால்தான் மக்கள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லி வந்தேன். இது இன்றைக்கு உண்மையாகிவிட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளினை விடுக்கிறேன். திமுக தயவில் ஆட்சி அமைகின்ற ஒரு வரலாற்று பிழையினை செய்து விடாதீர்கள். இப்படிப்பட்ட ஒரு பாவத்தை செய்தீர்கள் என்றால், உங்களை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். மேலும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆன்மாக்களை கண்ணீர் சிந்த வைத்துவிடாதீர்கள். மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்ளுங்கள். என்ன தவறு செய்தோம், ஏன் மக்கள் புறக்கணித்தார்கள் என்று ஆராய்ந்து அதனை சரிசெய்து மீண்டும் தேர்தல் களத்தில் வெற்றி பெற முயற்சி செய்வதுதான் ஒரு நேர்மையான அரசியலுக்கு வழிவகுக்கும் என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று தமிழக கவர்னரும் தேர்தலில் அதிக எண்ணிக்கையை பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஒரு வாய்ப்பு வழங்குவது தான் இயற்கை விதிகளுக்கு உட்பட்டதாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.