மதுரை,
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, இடஒதுக்கீடு, கடன் தள்ளுபடி அறிவிப்பு உள்ளிடவை அனைத்தும் தேர்தலுக்காக செய்யப்படும் நாடகம் என்று விமர்சித்தார்.
சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தினால் தான் ஒவ்வொரு சமூகமும் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது தெரியவரும் என்றும், அந்த அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்கினால் அது சமூக நீதி சார்ந்து செய்யப்பட்ட ஒன்றாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும் என்றும் அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.