சென்னை,
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா மாளிகையின் பத்தாவது தளத்தில் 19 மருத்துவ நிபுணாகளுடன் ஆலோசனையானது நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்தது. கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது.
மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான ஆலோசனை முடிந்துள்ள நிலையில் சட்டமன்ற கட்சி உறுப்பினர்களின் குழுவுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, பேசிய முதல்-அமைச்சர், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். தற்போது எம்.எல்.ஏ.க்கள் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சி குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஊரடங்கை நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்று தெரிகிறது.