தமிழக செய்திகள்

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், தடுத்தல், காத்தல், உதவுதல் ஆகிய 3 கடமைகளை அரசு செய்ய வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோய்ப்பரவல் இரண்டாவது பேரலையாக பரவத் தொடங்கி இருக்கிறது. தொற்று பரவல், பாதிப்பு, தாக்கம், குணமாகும் தன்மை, விளைவுகள் ஆகியவை மிக மோசமானதாக இருக்கின்றன என்றே மருத்துவ நிபுணர்கள் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 20-ந்தேதி (இன்று) முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

தினமும் இரவு நேரம் முழுவதும் ஊடரங்கு போடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவசியப் பயன்பாட்டு விஷயங்கள் நீங்கலாக மற்றவை அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும். அதற்கு ஊரடங்கு மிக அவசியமானது. எனவே இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் அவசிய பயன்பாட்டுக்காக மட்டுமே வெளியில் வந்து செல்லுங்கள். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும். முககவசம் பயன்படுத்துதல், கிருமிநாசினி பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டியது இல்லை! நமக்கெல்லாம் கொரோனா வராது' என்பது போன்ற அலட்சியம் எப்போதும், யாருக்கும் தேவையில்லை. அத்தகைய அலட்சியம் இருக்கக்கூடாது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை - குறிப்பாக கபசுரக் குடிநீர் போன்றவற்றை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். வருமுன் காப்போம் என்பதுதான் அனைத்துக்கும் அடிப்படையானது. நமது முன்னோர்கள், உணவே மருந்து, மருந்தே உணவு' என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில், நமது உணவையும் சத்தானதாக - ஆரோக்கியமானதாக அமைத்துக்கொள்ள வேண்டும். உடல் நலம் - மனநலம் ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். கொரோனா தாக்கி, அதில் இருந்து மீண்டவர்களும்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஊரடங்கு அறிவித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கக் கூடாது. கொரோனா என்பது அச்சம் தரும் நோயாக உள்ளது. இந்த அச்சத்தை அரசுகள்தான் முன்வந்து போக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். படுக்கை வசதிகள், மருத்துவர்கள் தயார் நிலையில் இருத்தல் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உத்தரபிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ற மருத்துவமனைகள் இல்லை, படுக்கைகள் இல்லை, தடுப்பூசிகள் இல்லை என்ற செய்திகளில் மிகுந்த அக்கறையுடனும் அவசரத்துடனும் அவசியத்துடனும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசியல் உள்நோக்கம் இல்லாமல் மாநில அரசுகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு உதவிகள் செய்ய வேண்டும்.

மீண்டும் வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை சூழலையும் அரசுகள் மனதில் வைத்து நலத்திட்ட உதவிகள், நிவாரணங்களை செய்துத்தர வேண்டும். கொரோனா மேலும் பரவாமல் தடுத்தல் - தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காத்தல் - ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவருக்கு உதவுதல் ஆகிய மூன்றையும் முக்கிய கடமைகளாக கொண்டு மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு