ஆர்.டி.ஓ. கைது 
தமிழக செய்திகள்

செங்கல் சூளைக்கு மண் எடுக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் கோட்டாட்சியர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

பரமக்குடி,

மானாமதுரையில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைக்கு மண் எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணபெருமாள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது.

லஞ்ச வேட்டை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வருபவர் சரவண பெருமாள். மானாமதுரை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் ஒருவர், தனது சூளைக்கு சவுடு மண் எடுத்து செல்வதற்காக முறைப்படி அனுமதி கோரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

ரூ.50 ஆயிரம்

இந்த அனுமதி ஆணையை வழங்குவதற்கு ஆர்.டி.ஓ. சரவண பெருமாள் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

கையும் களவுமாக சிக்கினார்

போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவிய ரூ.50 ஆயிரம் நோட்டுகளை அந்த நபர் ஆர்.டி.ஓ. சரவண பெருமாளிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணத்தை வாங்கிய ஆர்.டி.ஓ.வை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அரசு அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.