சென்னை,
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடந்தது. இதில் ஒருசில பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களில் வாக்குச்சீட்டுகள் மாற்றி வழங்கப்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி 9 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடலூர் மாவட்டம் கடலூர் ஒன்றியம் விலங்கல்பட்டு கிராம ஊராட்சி 4வது வார்டு 242 ஏவி வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகர், நாலுமாவாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு 67ஏவி, 68 ஏவி, 69 ஏவி, 70 ஏவி, 71 ஏவி வாக்குச்சாவடிகள், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், தாணிகோட்டகம் கிராம ஊராட்சி 2வது வார்டு 119வது வாக்குச்சாவடி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், உப்புக்கோட்டை கிராமம், கிராம ஊராட்சி 8வது வார்டு 52 ஏவி வாக்குச்சாவடி, மதுரை மாவட்டம் கொட்டம்பட்டி, வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 91வது வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். இந்த தகவலை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.