தமிழக செய்திகள்

ஊர்வலத்தில் ரகளை; போலீசாருக்கு கொலை மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் 2 வாலிபர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் நடனம் ஆடிக்கொண்டே வந்துள்ளனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் ரகளையில் ஈடுபட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊர்வலம்

விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் இருந்து கடந்த வியாழக்கிழமை ஊர்வலம் புறப்பட்டுச் சென்றது.

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடனம்

அப்போது, ஊர்வலத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்த சேகர் மகன் சுபாஷ் (வயது 22) மற்றும் தென்காசி மாவட்டம் வீரணம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் கருப்பசாமி(21) ஆகிய 2 பேரும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் நடனம் ஆடிக்கொண்டே வந்துள்ளனர்.

போலீசாருக்கு கொலை மிரட்டல்

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைக் கண்டித்து, முறைப்படுத்தி செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாரை ஏளனமாகப் பேசி, அவதூறான வார்த்தைகளால் திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

2 வாலிபர்கள் கைது

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த சுபாஷ் மற்றும் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT