தமிழக செய்திகள்

மரவள்ளி கிழங்கு விலை உயர்வு: டன் ரூ.15,500க்கு விற்பனை

கடந்த ஜனவரி மாதம் டன், 8,000 முதல் 9,000 ரூபாய்க்கு விற்பனையானது.

ஈரோடு,

மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்து, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உணவுக்கும், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ்களில் பயன்படுத்தவும், ஸ்டார்ச் மாவு, ஜவ்வரிசி உற்பத்திக்கும் பயன்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மார்ச் முதல் மூன்று மாதங்கள் அறுவடை சீசனாகும். கடந்தாண்டும், இந்தாண்டும் மழை இன்மையால் உற்பத்தி, வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறுகையில், "கடந்த ஜனவரி மாதம் டன், 8,000 முதல் 9,000 ரூபாய்க்கு விற்பனையானது. சீசன் நேரம் வரத்து இருந்ததால் விலை குறைந்தும், சீராகவும் இருந்தது. தற்போது குறைந்த அளவே அறுவடையாவதால், ஆலைக்கு, டன், 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.

"கடந்த மாதத்தை ஒப்பிடும்போது, 500 முதல் 800 ரூபாய் விலை அதிகம். உணவு, சிப்ஸ் போன்ற பயன்பாட்டுக்கு டன், 18 ஆயிரம் முதல், 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர். தற்போது, விலை நன்றாக இருப்பதால், லாபம் கிடைக்கிறது. ஆனால், வரத்து குறைவாகவே உள்ளது," என்றார்.

SCROLL FOR NEXT