தமிழக செய்திகள்

உடல் பருமன் அதிகரிப்பு: தொற்றா நோய் பாதிப்புகளால் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ்நாடு

துரித உணவு, புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவை தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

சென்னை,

உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த ஆய்வின்படி, தமிழகத்தில் நடக்கும் மொத்த இறப்புகளில் 75 சதவீதம் தொற்றா நோயால் ஏற்படுகிறது. இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.

உடல் பருமன்

மாறிவரும் உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள் உள்ளிட்டவை மக்களிடையே உடல் பருமனை அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகம் இருப்போருக்கு, தொற்றா நோய் பாதிப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

44.2 சதவீத பெண்கள்

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, தொற்றா நோய் பாதிப்புகளால் அதிகபட்ச சவால்களை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிக எடை, உடல் பருமனால் 44.2 சதவீத பெண்கள், 38.8 சதவீத ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தொடர்ந்து அதிகரிக்கும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளில்

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறுகையில், “பெரும்பாலான மக்களிடையே உடல் உழைப்பு, உடற்பயிற்சி இருப்பதில்லை. துரித உணவு, புகையிலை பயன்பாடு, மதுப்பழக்கம் ஆகியவை தொற்றா நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இந்நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் தொற்றா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், தொற்றா நோயால் ஏற்படும் இறப்பு 80 சதவீதத்தை தாண்டும்” என்று தெரிவித்துள்ளார்.