தூத்துக்குடி,
தூத்துக்குடி கணேசபுரம், கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (65), உப்பளத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 7-ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிக்குச் சென்ற அவர், வேலை முடிந்து தனது எக்ஸெல் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலை மற்றும் ஜார்ஜ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு இருசக்கர வாகனம் செல்வராஜின் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜ் உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்ற மர்ம இருசக்கர வாகன ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.