தமிழக செய்திகள்

பா.ஜ.க.வினர் சாலை மறியல்

உத்தமபாளையம் அருகே பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் கழிவு நீர் சாலையில் செல்வதாக கூறியும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக சாலைஓரங்களில் பா.ஜ.க.வினர் கட்சி கொடிகளை கட்டியிருந்தனர். அப்போது அதே பகுதியில் தி.மு.க.வினரும் நிகழ்ச்சி நடத்த கொடி கட்ட முயன்றனர். அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பின்னர் அது மோதலாக மாறியது. இதில் பா.ஜ.க. கம்பம் ஒன்றிய தலைவர் நந்தகோபால், பிரசார அணியின் தலைவர் சின்னத்துரை ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகளை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் கட்சியினர் உத்தமபாளையம்-கம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT