தமிழக செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சீர்காழியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தி தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் சசிகலா தேவி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை உதவி கோட்ட பொறியாளர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது. கார் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும். வாகனங்களை இயக்கும்போது கைபேசியை பயன்படுத்தக்கூடாது. மேலும் குடிபோதையிலோ அல்லது வாகன உரிமம் இல்லாமலோ வாகனங்களை ஓட்டக்கூடாது. ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் காற்றுஒலிப்பான்களை பயன்படுத்தக் கூடாது. சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஊர்வலத்தில் சாலை ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், பிரபு, செல்வம், ஜோதி ராமன், வெங்கடேசன் மற்றும் சாலை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT