சென்னை,
மேற்கு வங்காளத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டு சென்னையில் பதுங்கியிருந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அலீம் கான் - சிமகதுன் தம்பதியினர் துப்பாக்கியுடன் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் துப்பாக்கியை காட்டி வீட்டிற்குள் இருந்தவர்களை மிரட்டி 35 சவரன் தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
பணம், நகையை பறிகொடுத்தவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய தம்பதியினரை தேடி வந்தனர்.
மேற்கு வங்காளத்தில் இந்தக் கொடூர கொள்ளைச் சம்பவத்தை செய்த தம்பதி, போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு விரைந்தனர். இதையடுத்து சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வரும் தங்கள் உறவினர்களின் வீட்டில் அவர்கள் ரகசியமாகத் தங்கி இருந்தனர்.
குற்றவாளிகளின் மொபைல் சிக்னல் மற்றும் ரகசிய தகவல்களின் அடிப்படையில், மேற்கு வங்க போலீசார் சென்னைக்கு விரைந்தனர். சென்னை மதுரவாயல் போலீசாரின் உதவியுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு பதுங்கியிருந்த தம்பதியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், கைதானவர்களை மேற்கு வங்கத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை நடத்த உள்ளனர்.