தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்

ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அதிகமாக விரும்புகின்றனர்.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்வதற்கு ரோப்கார் சேவையை குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அதிகமாக விரும்புகின்றனர்.

இந்த ரோப்கார் சேவையானது காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படுகிறது. அதில் பலமாக காற்று வீசும்போது சேவை நிறுத்தப்படும். அதேபோல் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளின்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாகவும், பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பா தையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.