திருப்புவனம்,
சிறையில் இருந்து வந்த மறுநாளே தனது மனைவியை, ரவுடி வெட்டிக்கொன்றார். இதனால் தாயை இழந்து அவர்களுடைய குழந்தைகள் தவித்து வரு்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே சொட்டதட்டி கிராமத்தை சேர்ந்தவர் யோக ராஜா (வயது 29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வழக்கில் ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் மாலை யோகராஜா, சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கும், மனைவி பாண்டிச்செல்விக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த யோகராஜா அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், கீழடி இன்ஸ்பெக்டர் மயில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாண்டிச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக யோகராஜாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் இருந்து வந்த மறுநாளே மனைவியை ரவுடி வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாண்டிச்செல்வியை இழந்து அவருடைய 2 குழந்தைகளும் தவித்து வரு்கிறார்கள்.