சென்னை,
சென்னையின் புறநகர் பகுதியான ஓட்டேரியை சேர்ந்த சிலம்பு என்ற சிலம்பரசன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏ பிளஸ் ரவுடியாக கருதப்படும் சிலம்பராசன், கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரது இருப்பிடத்தை கண்டறிய போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை பள்ளிக்கரணையில் இன்று துப்பாக்கி முனையில் ஓட்டேரி போலீசாரால் சிலம்பரசன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிலம்பரசனிடம் இருந்து 2 செல்போன்கள், நாட்டுத் துப்பாக்கி, ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட்டின் அடிப்படையில் சிலம்பரசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஓட்டேரி காவல் நிலையத்தில் வைத்து சிலம்பரசனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.