சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நகர பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள 7 ஸ்டார்' பிரியாணி கடையில், ஆனந்த் என்பவர் தன் மனைவி பிரியதர்ஷினி, மகன் சரண் (வயது 14), மகள் லோசினி (10) ஆகியோருடன் கடந்த மாதம் பிரியாணி, தந்தூரி சிக்கன் ஆகியவற்றை சாப்பிட்டார். வீட்டிற்கு சென்றதும் அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் 4 பேரும் ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமி லோசினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரியாணி கடை உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், உணவகத்தை தரமாக பராமரித்து வருகின்றனர். கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று விட்டது. சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஓட்டல் உரிமையாளர் தயாராக உள்ளார் என்று வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.