தமிழக செய்திகள்

மாடுகளை சாலையில் திரியவிட்ட உரிமையாளர்களிடமிருந்து ரூ.1.24 கோடி அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான மாடுகள் உரிய இட வசதி இன்றி, சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் சில நேரங்களில் பொதுமக்கள் மாடுகளால் தாக்கப்படும் சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறு போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 5 மாடு பிடிக்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.1 கோடியே 24 லட்சத்து 3 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடுகளின் உரிமையாளர்கள் சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விடாமல் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.