தமிழக செய்திகள்

தென்னை சாகுபடிக்கு ரூ.16 கோடி சிறப்புத் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான த.வெ.க. அரசின் முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

அப்போது, தென்னைக்கான சிறப்புத் திட்டம் குறித்து அமைச்சர் வினோத் கூறியதாவது:-

"வேர் முதல் நுனி வரை பயன்தரும்- தென்னை என்றும் மனிதனின் உற்ற துணை"

தென்னை சாகுபடி

தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு சுமார் 670 கோடி தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்னை சாகுபடியிலும் சந்தைப்படுத்துவதிலும் தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களைக் கருத்தில் கொண்டு பூச்சி நோய்த்தாக்குதல்களுக்குத் தீர்வளித்தல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மதிப்புக்கூட்டலை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இனங்களைக் கொண்டு "தென்னைக்கான சிறப்புத் திட்டம்" மொத்தம் 16 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

i. தென்னை டானிக் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் திறம்பட உறிஞ்சப்படுவதுடன், மரங்களின் வளர்ச்சித் திறன் மேம்பட்டு, பூக்கள் மற்றும் காய் பிடித்தல் அதிகரிக்கும். எனவே, தென்னை விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, தென்னை மரங்களின் நலத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2026-27ஆம் ஆண்டில், 86 ஆயிரம் ஏக்கரிலான தென்னை மரங்களுக்கு "தென்னை டானிக்" வழங்குவதற்காக 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ii. தென்னையைத் தாக்கும் வேர்வாடல் நோய் மற்றும் சுருள் வெள்ளை FF 80 ஆகியவற்றின் பாதிப்பால், 35 முதல் விழுக்காடு வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இப்பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளுடன் நீடித்த, நிலையான உயிரி கட்டுப்பாட்டு முறைகளைத் தென்னை விவசாயிகளிடையே பெருமளவில் பரவலாக்கம் செய்திட 1,350 ஏக்கர் பரப்பளவில் 'அபெர்டோகிரைசா' என்ற இரைவிழுங்கிப் பூச்சிகள் மற்றும் 'கோகோகான்' நுண்ணுயிர்க் கலவை ஆகியவை 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ஒரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

iii. தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயைத் திறம்படக் கட்டுப்படுத்த கிரைசோபெர்லா இரைவிழுங்கி, ஐசாரியா ஃபுமோசோரோசியா பூஞ்சை ஆகிய உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகளைப் பெருமளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குமாறு பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், புதிதாக 5 தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் 3 கோடி ரூபாய் நிதியில் அமைக்கப்படும். கோயம்புத்தூர் மாவட்டம் ஆழியார் நகர், கண்ணம்பாளையம், தேனி மாவட்டம் வைகை அணை, விருதுநகர் மாவட்டம் தேவதானம் ஆகிய இடங்களில் புதிய கிரைசோபெர்லா உற்பத்தி மையங்களும், கன்னியாகுமரி மாவட்டம் புத்தளத்தில், ஐசாரியா ஃபுமோசோரோசியா உற்பத்தி மையமும் அமைக்கப்படும்.

iv. தரமான தென்னங்கன்றுகள் கிடைப்பதை உறுதி விவசாயிகளுக்குக் செய்ய கரூர் முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணையில் 15 ஏக்கர் பரப்பளவில் "புதிய தென்னை நாற்றுப்பண்ணை" ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

V. தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம் தென்னை விவசாயிகளின் வருமானத்தை நீடித்த நிலையான முறையில் பெருக்குவதற்கும், மதிப்புக் கூட்டுவதால், தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்யவும், நிலையான சந்தை வாய் வாய்ப்பினை உருவாக்கவும், தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை செயல்படுத்தும் விதமாகவும் "தமிழ்நாடு தென்னைப் பதப்படுத்தும் கழகம்" வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையால் 22 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் புதிதாக அமைக்கப்படும். இக்கழகத்தின் வாயிலாக, அறுவடைக்குப்பின் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், பதப்படுத்துதல், தரக்குறியீடு இடுதல், சிப்பம் கட்டுதல், ஏற்றுமதி ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், விரிவான சேவைகளை வழங்க ஏதுவாக, தென்னை வளர்ச்சி வாரியம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறையுடன் ஒருங்கிணைந்து இக்கழகம் செயல்படும். நடப்பாண்டில், இதற்கென 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

vi. கொப்பரை விலை வீழ்ச்சியினைத் தடுத்து விலையினை நிலைப்படுத்த, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கான "விலை ஆதரவுத் திட்டம்" உரிய நேரத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.