தமிழக செய்திகள்

வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி

வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வந்து, திடீரென்று தலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அவரை அங்கு காவலுக்கு நின்ற போலீசார் தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினார்கள். தி.மு.க. பிரமுகரான இவர், கவுன்சிலர் ஒருவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி குறிப்பிட்ட கவுன்சிலர் ரூ.18 லட்சம் வாங்கியதாகவும், 6 பேரிடம் வாங்கி அந்த பணத்தை கொடுத்ததாகவும், தற்போது வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும், குறிப்பிட்ட கவுன்சிலர் மீது புகார் கொடுத்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சதீஷ் தெரிவித்தார். மேலும் அந்த கவுன்சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க வந்ததாகவும் சதீஷ், போலீசாரிடம் கூறினார்.

அவரை வேப்பேரி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். உரிய நடவடிக்கை எடுக்க வேளச்சேரி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT