சென்னை,
ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த தேவன் த/பெ. சின்னையா (வயது 50) மற்றும் சென்னை, பட்டாபிராமைச் சேர்ந்த மோசன், த/பெ.குப்பையா (வயது 39) ஆகிய இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்களும் இன்று (7-9-2023) காலை செப்டிக் டேங்கை சுத்தம் செய்த போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.