தமிழக செய்திகள்

பெரம்பலூர் அருகே ரூ.2.44 கோடி பறிமுதல்: திமுக நிர்வாகியிடம் விசாரணை

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதன்படி, உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள், தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பெரம்பலூர் செங்குணம் பகுதியில் உரிய ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.44 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஜெயராமன், கார் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணத்தை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க பெரம்பலூர் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறும் சூழலில் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.