தமிழக செய்திகள்

ரு.35 கோடி பேரம்... தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதியில் செந்தில் பாலாஜியின் சகோதரர்? பரபரப்பு தகவல்கள்

சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.

தவெக ஆட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை, வேறு கட்சிக்கு மாறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும், இதற்காக பேரம் பேசியதாகவும் யூடியூபர் IPDS திருநாவுக்கரசு மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் யூடியூபர் திருநாவுக்கரசை இன்று கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மேலும் கரூரைச் சேர்ந்த 2 பேர் தான் தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக திருநாவுக்கரசு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்

இந்த தகவலின்படி, கரூர் விரைந்த சென்னை போலீசார் கரூரில் சக்தி மெஸ் என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்த திமுக பிரமுகர்களான கார்த்திக், ரமேஷை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் ஆவர். மேலும் செந்தில் பாலாஜியின் கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கார்த்திக் திமுக விளையாட்டு அணி துணை செயலாளராக உள்ளார். கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர்கள் 2 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் நேற்று கூறிய நிலையில், இன்று செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்து பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு எம்எல்ஏ-க்கும் ரூ.15 கோடி பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், கிருஷ்ணன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான டாக்டர் என்.இளையராஜாவை சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் Indian Political Democratic Strategies (IPDS) என்ற கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், ஒரு முக்கிய கட்சியை சேர்ந்த சிலர் கேட்டுக் கொண்டதன்பேரில் தொடர்பு கொள்வதாகவும், நேரில் சந்திக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஆனால், தான் வேறு பணியில் இருப்பதாகக் கூறி இளையராஜா தொடர்பை துண்டித்துள்ளார். ஆனால், மீண்டும் தொடர்பு கொண்ட மேற்படி திருநாவுக்கரசு, இளையராஜாவிடம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தாலும் அத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு சன்மானமாக ரூ.35 கோடி வரை தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா எனக்கு விருப்பமில்லை. இனிமேல் என்னிடம் பேசாதீர்கள் என்று கண்டிப்புடன் கூறியபோது. தான் பேசியது குறித்து வெளியே தெரிவித்தால் இளையராஜாவும் அவரது குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று திருநாவுக்கரசு மிரட்டியுள்ளார்

செந்தில்பாலாஜியின் சகோதரர்...

இதனால் சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா 29.06.2026 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது ஊழியரான தன்னிடம் தனது மக்கள் பணியை செய்யக் கூடாது என்பதற்காகவும், தனது பேச்சுக்கு உடன்பட லஞ்சம் தர முயற்சித்ததோடு. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்புலமாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

அப்புகாரின்பேரில், டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாகச் செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புலன் விசாரணையில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் என்பவர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததும், செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரின் அறிவுரையின் பேரிலேயே எதிரி திருநாவுக்கரசு வழக்கின் புகார்தாரரான சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவை தொடர்பு கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.