கரூர்,
த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி குதிரை பேரம் பேசிய வழக்கில் நாளை நேரில் ஆஜராக செந்தில்பாலாஜிக்கு போலீசாரால் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும்போது, ஆளும்கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ரூ.35 கோடி வரை பணம் கொடுப்பதாக தி.மு.க.வினர் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம், ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ.இளையராஜா கடந்த 29-ந்தேதி புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, யூடியூபர் திருநாவுக்கரசு, திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் உள்பட 8 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் நாங்கள் இவ்வாறு செயல்பட்டோம் என்று தெரிவித்தனர். எனவே செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் ஆகியோரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமாரின் வீடு மற்றும் கரூர் அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்வீக வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அவர்கள் 2 பேரும் தலைமறைவாக இருக்கும் நிலையில், வெளிநாடு தப்பி செல்லாமல் இருப்பதற்காக தேடப்படும் நபர்கள் என்ற 'லுக் அவுட் நோட்டீசை திருவல்லிக்கேணி போலீசார் பிறப்பித்துள்ளனர். இந்த நோட்டீஸ் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சென்றடைந்துள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் வழங்குவதற்காக திருவல்லிக்கேணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நேற்று மதியம் 11.30 மணியளவில் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு மண்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசனுடன் வந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. வக்கீல்கள் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன்பு திரண்டனர். பின்னர் வீட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வேலுசாமி- பழனியம்மாளிடம் சப்-இன்ஸ்பெக்டர் சம்மனை வழங்கினார்.
அப்போது வேலுசாமியிடம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் நாளை (திங்கட்கிழமை) காலை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறினார். மேலும் வேலுசாமியிடம் சம்மன் வழங்கப்பட்டதற்கான கையொப்பமும் பெற்றுக்கொண்டார். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பினர். மருத்துவ சிகிச்சைக்காக ஜூன் 26-ம் தேதியே சிங்கப்பூர் சென்றுவிட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். இதுபோல, செந்தில் பாலாஜி, அவரது தம்பி வெளிநாடு சென்றுவிடாமல் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.