சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
மெட்ரோ ரெயிலில் சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, செல்போனில் சத்தமாக பேசுவது, ஹெட்போன் இல்லாமல் பாடல் அல்லது வீடியோக்களை பார்ப்பது, மெட்ரோ ரெயில்களிலும், வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியை பயன்படுத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.
விதியை மீறும் பயணிகளுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ ரெயில் வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரெயில் மற்றும் வளாகத்திற்குள் சத்தமாக பேசுவது போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.