சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் மும்பையில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ரகசிய அறைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரிடம் இருந்து ரூ.98 லட்சத்து 55 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 137 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முகமது இம்ரானை கைது செய்த அதிகாரிகள், துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வந்து பின்னர் உள்நாட்டு விமானத்தில் மும்பை பயணியாக வந்து இருக்கலாம் என கருதுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், இந்த தங்க கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.