தமிழக செய்திகள்

ஜவுளிக் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு: பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும், பெண்ணும் தங்களது வீட்டு திருமணத்திற்காக துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களை தேர்வு செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் உள்ள ஜவுளிக் கடையில் திருமணத்திற்குத் துணி எடுப்பது போல நடித்து, பணப்பெட்டியிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டு திருமணத்திற்காக துணி

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அகிலாண்டபுரம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் (வயது 32), கயத்தாறு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு ஆணும், பெண்ணும் தங்களது வீட்டு திருமணத்திற்காக துணி எடுப்பதாகக் கூறி ரூ.27 ஆயிரத்திற்கு ஜவுளி ரகங்களை தேர்வு செய்துள்ளனர். பின்னர் பணத்தைக் கொடுத்துவிட்டு துணிகளை எடுத்துக் கொள்வதாக கூறிவிட்டு அவர்கள் கடையை விட்டு வெளியேறியுள்ளனர்.

ரூ.2 லட்சம் பணம் திருட்டு

இதைத் தொடர்ந்து, கடையில் இருந்த பணப்பெட்டியை உரிமையாளர் மகாராஜன் சரிபார்த்தபோது, அதிலிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மகாராஜன் அளித்த புகாரின் அடிப்படையில், கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்கள் போல நடித்து பணத்தை திருடிச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT