தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் இதுவரை ரூ.33.73 லட்சம் பணம் பறிமுதல்: கலெக்டர் இளம்பகவத் தகவல்

தூத்துக்குடியில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் இதுவரை ரூ.11.42 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. விதிமீறல்களைத் தடுக்கவும், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்து 380.

கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்கள்: ரூ.20 ஆயிரத்து 280 (மதிப்பு).

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள்: ரூ.19 ஆயிரத்து 032 (மதிப்பு).

ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தொகை: ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 100.

நேற்று சனிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் விதிமுறைகளின்படி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவை பறிமுதல் செய்யப்பட்டு, உரிய விசாரணக்குப் பின்னரே விடுவிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.