தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெருநாழி விலக்கில் தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் சேகர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்த தனியார் பேருந்தினை சோதனை செய்தனர்.
அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை சோதனை செய்த போது அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.35 லட்சத்து 22 ஆயிரம் பணம் இருப்பது தெரிய வந்தது. அதேபோன்று மற்றொரு பயணியான விளாத்திகுளம் அம்பாள்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 51 பணம் இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த 2 பேரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணம் இல்லாமல் பல லட்ச ரூபாய் பணம் என்பதால் அந்தப் பணம் தூத்துக்குடி வருமான வரித்துறை உதவி இயக்குனர் பாலமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த பணம் அவர்களுக்கு எப்படி வந்தது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்தில் 2 பயணிகளிடம் ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.