கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

உதயநிதி ஸ்டாலின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது முதல்-அமைச்சர் விஜய் குறித்து தெரிவித்த சில கருத்துகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சும், கைது நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை; இரண்டும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

தஞ்சாவூர் போராட்டத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்ணியமற்றதாகும். இது கண்டிக்கத்தக்கது. துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வகித்த, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் கண்ணியமான முறையில் பேசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக கைது செய்ய வேண்டிய தேவை இல்லை. நண்பகல் 12 மணி வரை அவரை கைது செய்வதைத் தவிர்க்கும்படி ஐகோர்ட்டே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை, அதுவும் நாளை சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும், காவல்துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும்தான்.

தமிழ்நாட்டில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன. அவற்றைத் தீர்ப்பதில்தான் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் அக்கறை காட்ட வேண்டுமே தவிர இது போன்ற செயல்களில் அல்ல. இனியாவது ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய முன்வர வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் - ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.