ஆறாக்குளம் சுடுகாடு 
தமிழக செய்திகள்

சுடுகாட்டில் நரபலி என வதந்தி: குழியைத் தோண்டிய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

குழிக்குள் மனித உடல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளே இறந்த நாய் ஒன்றின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுடுகாட்டில் நரபலி கொடுக்கப்பட்டுள்ளது என்ற வதந்தியால் குழியைத் தோண்டிய போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

நரபலி வதந்தி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த ஆறாக்குளம் சுடுகாட்டுப் பகுதியில் மர்மமான முறையில் புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு மலர்களால் தூவி மூடப்பட்டிருந்தது. இதனால், மர்ம நபர்கள் யாரையோ நரபலி கொடுத்துவிட்டு ரகசியமாக புதைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களிலும் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் திகிலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

விசாரணையில் வந்த உண்மை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சந்தேகத்திற்குரிய அந்த குழியைத் தோண்டினர். குழிக்குள் மனித உடல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளே இறந்த நாய் ஒன்றின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

திகிலாகத் தொடங்கி இறுதியாக நகைச்சுவையாக முடிந்த இந்த சம்பவத்தால், அங்கு கூடியிருந்த போலீசாரும் பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். மேலும், பொதுமக்கள் யாரும் இது போன்ற தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என போலீசார் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.